இரவின் மிதமான குளிரோடு
காற்று தடவிச் சென்றது.
தெரு கிடந்த அமைதியிலும்,
தொலை தூரத்தில் எங்கோ
ஊளையிடும் நாயின் ஈனக் குரலிலும்
இந்த இருளிலும்
இருக்கிறது எனது சோகம்.
நினைத்துப் பார்ப்பதற்கு
கடந்த இரவுகள் கூட ஒன்றும்
இனிப்பானவையல்ல எனும் போது
வற்றிவிட்ட இந்தக் கால்வாய்க்கும்
உவமையாக முடியாத நான்.
வாழ்வைப் போலவே,
எதற்கு?, ஏன்? என்றறியாப் பயணம்
பாதி வழியில் எங்கேனும்
எரிகிறதா ஒரு சிறு விளக்கு?