Friday, November 03, 2006

தனிமை

ஆக்கம்: தனேஸ்

இருள் உடுத்திப் பரந்து கிடக்கிறது இரவு
துயில் மறந்த விழி சுரக்கும் நினைவுகளோ
சுவர் மோதித் தெறிக்கிறது.

அன்று,
சுழன்றடிக்கும் காற்றில்
தலைவிரித்தாடும் பூவரசின் நிழலில்,
காலையும் மாலையும் கலவி செய்யும்
ஒரு மையப் பொழுதில்
நமது முதல் சந்திப்பின் சங்கடத்தில்
உன் நெற்றியில் வியர்வை.

பிறகு,
ஆத்மாக்களின் உரசல் கனிந்து
சடங்குகளுடன் முடிய
காதலை வெற்றி கொண்ட செருக்கு இருவருக்கும்

உன் சிரிப்பில் சிணுங்களில்
அலை அலையாய் நெளியும் உன் கூந்தலில்
புதைந்தழிந்த பொழுதுகள் எத்தனை....

காதலால் கடந்த நாட்கள்!
(ஞாபகம் இருக்கிறதா எதுவும்?)

தலைவிதி மாறிய தரித்திர நாளொன்றில்
மலை நோக்கியே நகரும் நதி
கரை தழுவ மறுக்கும் அலைகள்
நீ,
நான்!

காதலை உடைத்து வீசி,
நீ விலகி நடக்கையில்
சமரசம் பேசுதற்கும்
உனக்கு விளக்கமளிக்கவும்
இடங்கொடுக்காத கர்வம்
நிரம்பிக் கிடக்கிறது
காலியான மதுக் குவளையுள்ளே...

தனிமைச் சிறையில்
அலைந்து, உழன்று, திணறும் மனதில்
இரவுகள் தூங்குவதில்லை;
விடியல்கள் என்பதுவோ
தோன்றவதே இல்லை!

1 comment:

தனேஸ் said...
This comment has been removed by the author.