ஆக்கம்: தனேஸ்
இந்த நான்
ஒரு திசைதிருப்பப்பட்ட நதியாக
அறிமுகமில்லாத கரைகள் தழுவியபடி
புதிதாய் அலைகிறேன்
நான்
எழுதாத கவிதைகளின்
வினோதமான சுரங்கள்
என் காதுகளுக்குள்
அங்கு
தெற்குப் புறத்தின்
நீண்ட சர்ப்பங்கள் - என்
நிழலினையும் துரத்த
என் புதைகுழியின்
இடம் மாறிப்போனது
எனது கண்ணாடியில்
இன்னொருவனின் விம்பம்;
இன்னும் பழைய நான்
அப்படியே இருக்கிறேன்
புதிதாக்கிக் கொள்ள
என்ன இருக்கிறது என்னிடம்
அங்கு
என் உறவுகளின் குருதியில்
சிவப்பாகிய தாமரைகள்
காத்திருக்கிறது புத்தருக்காக
இன்னும் மானிடம் பற்றி
எழுதாத கவிதைகள்
புழுவாகி நெளிகிறது
என் காதுகளுக்குள்
No comments:
Post a Comment