Sunday, October 15, 2006

மீமெய்ம்மையியல்(Surrealism)

ஆக்கம்: தனேஸ்

தூக்கத்திலே நினைவிலி மனத்தில் தோன்றும் கனவுகளை அந்தத் 'தூக்கக் கனவுகள்' போலவே சித்திரிக்க முற்படும் வித்தியாசமான கலைப்பரிமாணமாக, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மீமெய்ம்மையியல் (surrealism), அதாவது உயர்ந்த உண்மையியல், உருவெடுத்தது. பல்வேறு துறைகளிலும் இக்கலை தாக்கத்தை ஏற்படுத்தியதெனினும், குறிப்பாக ஓவியத்துறையிலேயே இதன் பிரசன்னம் பிரபல்யமானது.

மீமெய்ம்மையியல் விற்பன்னர்கள் வரையும் ஓவியங்களின் கருத்துக்கள் சுலபமாக உய்த்தறியப்பட முடியாதவை (Abstract வடிவங்கள்). பாரம்பரிய ஒவியங்களில் நிஜமான வடிவங்களே பிரதிபலிக்கப்பட்டிருக்கும். ஆனால், மீமெய்ம்மையியல் ஓவியங்களோ நிஜமான வடிவங்களுடன் கற்பனையான அல்லது உளவியல் சார்ந்ததான வடிவங்களையும் முன்னிறுத்திப் புதுமை சேர்த்தன.



உளவியல் திறனாய்வுக்கு வித்திட்ட Sigmund Freud மீமெய்ம்மையியல் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தினை உண்டாக்கினார். உளவியல் பற்றிய அவரது ஆராய்ச்சியில் கனவுலகினைப் பற்றிய ஆய்வுகள் பலவும் அடங்குகின்றன. அவரது சமகாலத்தவரான உளவியலறிஞர் Dr. Carl Jung என்பவர் தனது கனவுகளையும், கற்பனைகளையும் ஓவியங்களாக வரைந்து காண்பித்தார். இவ்வாறு கனவுகளையும் கற்பனைகளையும் வரைவது அல்லது அவற்றிலிருந்து சிந்திப்பது புதுமையான பல முறைகளை கலையுலகுக்கு அறிமுகம் செய்தது. எழுந்தவாரியாக கைபோன போக்கில் கீறுதல் ஓவியத்துறையில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்படிப்பட்ட ஒவியங்களை, நவீன ஒவியங்களென்ற பெயரில் நாம் அறிந்திருக்கின்றோம்.

கவிதைகளிலும் இதன் பாதிப்பு இருந்து வருகின்றது. உதாரணமாக, கவிதையெழுதுவதில் ஒரு புதிய முறையை இது அறிமுகம் செய்தது. வார்த்தைகளை எழுந்தவாரியாக, மனம் போகும் போக்கில் எழுதுதல் ஒரு கவிவடிவமாகியது. தமிழில் இப்படிப்பட்ட கவிதைகளின் தெளிவான விபரங்களை அறிய முடியவில்லை.

கற்பனையினை அள்ளித்தெளித்து, படிமங்களையும் குறியீடுகளையும் செறிவாகக் கொண்ட மீமெய்ம்மையியல் கவிதைகளும் எழுதப்பட்டன. அப்துல் ரஹுமானின் பால்வீதி இப்படியானதொரு தொகுப்பாகும்.


கீழேயுள்ள கவிதை, French கவிஞர் Robert Desnos என்பவரின் பிரபலமான மீமெய்ம்மையியல் கவிதையின் தழுவலாகும். இதன் தலைப்பு 'Mobius Strip'. [Mobius Strip என்பது ஒரு பக்கமும் ஒரு விளிம்பும் கொண்டதோர் அமைப்பாகும். ஜேர்மன் கணிதவியலாளர் Mobius இந்த வடிவத்தினை கேத்திர கணிதத்துக்கு அறிமுகம் செய்தார்.]

விநோதமான பரிமாணம்
நான் ஓடிக்கொண்டிருக்கும் பாதை
நாளை நான் திரும்பும் போது
அதாகவே இருக்காது
நேர்கோட்டில் பயணிப்பது
பயனற்றது, சென்றால்
நான் வேறிடத்துக்கே திரும்பவேண்டியிருக்கும்
நான் சுற்றிக்கொண்டேயிருக்கின்றேன்
ஆனால் வானம் மாறுகிறது
நேற்று நானோர் குழந்தை
இன்று இளைஞன்
உலகமே விநோதமானது
ரோஜாக்கூட்டத்திலுள்ள ரோஜா
இன்னொரு ரோஜா போல் இருப்பதில்லை...
இந்தக் கவிதை வாழ்க்கையின் விநோதத்தினை எவ்வாறு பிரதிபலிக்கின்றது என்பது ஒவ்வொருவரினதும் அர்த்தப்படுத்துதலைப் பொறுத்தது.

No comments: